Saturday, 21 March 2015

Kavithai - 81

ஆடை



மானிட மானத்தைக் காப்பாற்றி,
அவர்களுக்கு அழகும் ஊட்டுவதே,
நேசவர் நெய்யும் ஆடையாகும்.
காதலர்கள் ஒழுக்கத்தை காப்பாற்றி,
வாழ்க்கைக்கு பொலிவூட்டும்,
காதல் திருமணமும் ஓர் அழகிய ஆடையே !!



சிநேகிதம்


ஒரு நாளைய சிநேகிதம்
இரயில் சிநேகிதம்.
வாழ்நாளைய சிநேகிதம்
உயிர் சிநேகிதம்.
பேராசையோடு வரும் சிநேகிதம்
உயில் சிநேகிதம்.
இதயத்தோடு வரும் சிநேகிதம்
மெய் சிநேகிதம்.

பயணத்தோடு முடியும் சிநேகிதம்
இரயில் சிநேகிதம்.
மரணத்தோடு முடியும் சிநேகிதம்
உயிர் சிநேகிதம்.
பணத்தோடு முடியும் சிநேகிதம்
உயில் சிநேகிதம்.
மணத்தில் "முடிவது"
மெய் காதல் சிநேகிதம் !!



விசித்திரம் 



உலகம் பேசும் மொழிகள்
பல்லாயிரம் ; ஆனால்,
காதலர்களை எதிர்த்து
வந்ததே அதன் சரித்திரம்.

காதலர்கள் பேசுவதோ
மௌன மொழி; அதைக்கொண்டே
காவியம் பல படைத்து
வாழ்ந்ததே அதன் விசித்திரம்.





புனிதம் 



இமயம் போல் உயர்ந்த
மனதிலே உள்ளது,
இதயம் என்னும்
புனித கோவில்.

அக்கோவிலை அடைந்தது
ஒரே ஒரு பெண்மணி;
அவள்தான் அதில் வாழும்,
என் ஆசை கண்மணி.



Friday, 20 March 2015

Kavithai - 88

பக்தி 



மண்ணால் மனிதனை உருவாக்கி,
அதனுள், இரக்கமே இல்லாத 
கல்நெஞ்சை வைத்தான் இறைவன்.

மண்ணால் இறைவனை வடிவமைத்து,
அவனை அமைதியே இல்லாத 
கடலினுள் கலக்கினான் மனிதன்.


 


பஞ்சம் 



இங்கு ஜனத்தொகை பெருகுவதால்
பல இலட்சங்களாய்,
குறைகிறது மனிதர்களின்
வாழ்க்கை இலட்சியங்கள்.

வாழும்போது வரும் துன்பங்கள்
பல இலட்சங்கள்.
மரித்த பிறகும் கிடைப்பது அரிது
நிலம் ஆறடி, இடுகாட்டில்  !!!!

Kavithai - 87

கூண்டு 



வானத்தில் பறந்த போது
கிளி பாடியது.
தன் மனதின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தது.

கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு
கிளி பேசியது. ஆனால்,
மனிதன் கற்றுக் கொடுத்த
சில வார்த்தைகள் மட்டும்.

இயற்கையின் அழகை இரசித்து
நான் பாடினேன்.
என் இதயத்தின் மகிழ்ச்சியை
உலகிற்கு தெரிவித்தேன்.

காதல் வலையில் சிக்கியபின்னும்
நான் பாடுகிறேன். ஆனால்,
இதயம் கற்றுத் தந்த
நம் காதலை மட்டுமே  !!!

Kavithai - 86

முத்து



ஆழ்கடலினுள் முத்துக்குழிப்பவன்,
முத்து எடுப்பானோ பயந்தால் அவன்,
கடல் பிராணிகளுக்கும் மரணத்திற்கும்?

பெண்ணின் ஆழ்மனதில் இருக்கும்
காதல் முத்தை எடுப்பானோ காதலன் பயந்தால் 
உலகின் எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும்? 




கடைக்கண் பார்வை 



பல காட்சிகளை காட்டும் 
கண்களைக் காண,
தேவைப்படுகிறது ஒரு 
பிரதிபலிக்கும் கண்ணாடி.

இதயத்தினுள் இருக்கும் காதலை 
காண தேவைப்படுகிறது 
வசீகரிக்கும் அவளது 
கடைக்கண் பார்வை !!!


Kavithai - 85

மலர் 



பூ மலர்வதைப் பார்த்து 
பொழுது விடிந்ததோ? இல்லை,
பொழுது விடிவதைப் பார்த்து 
பூ மலர்ந்ததோ? 

பூ அழைப்பதைப் பார்த்து 
வண்டு வந்ததோ? இல்லை,
வண்டு வருவதைப் பார்த்து 
பூ உபசரித்ததோ?

பூ மகிழ்வதைப் பார்த்து 
வண்டு பாடியதோ? இல்லை,
வண்டு பாடுவதைக் கேட்டு 
பூ மகிழ்ந்ததோ?

பூவை முகர்ந்து கூந்தல் 
மணம் பெற்றதோ ? இல்லை,
கூந்தலின் மணமால் 
பூ மணம் பெற்றதோ ?

பூவின் அழகைக் இரசித்து 
மங்கை நாணினாலோ? இல்லை,
மங்கையின் அழகில்  மயங்கி 
பூ வாடியதோ?

Thursday, 19 March 2015

Kavithai - 82

காதல் சிட்டுக்கள்



இருவரும் உயிருக்குயிராய் 
நேசிப்பவர்கள்.
தங்கள் இதயத்தை 
பரிமாரிக்கொண்டவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

இயற்கையை இரசித்து 
வாழ்பவர்கள்.
கிளிகளைப்போல் பேசுபவர்கள்.
குயிலைப்போல் பாடுபவர்கள்.
குருவிகளைப்போல் சிறகடித்து 
பறப்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

அமைதியின் சின்னமான புறாவைப் 
போன்றவர்கள்.
புறாவைப்போல் கொஞ்சுவார்கள்.
மயில்போல் சந்தோஷமாக 
ஆடுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

நாய்களைப்போல் நன்றி 
உள்ளவர்கள். ஆனால்,
ஓநாயின் தந்திரம் அறியாதவர்கள்.
சிங்கம் போன்றவர்கள், ஆனால்,
தீங்கு பிறருக்கு
விளைவிக்காதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

அவர்களின் வாழ்வில் சூரியனின் 
ஒளி வீசுகிறது.
இவ்வுலகில் வெள்ளியைப்போல்
மின்னுபவர்கள்.
நிலாவைப்போல் ஒளி வீசுபவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

கற்பனை செய்வதில் கவிஞர்கள்.
சிந்தனையில்  சிறகடித்து பறப்பவர்கள்.
நிலாவைக் கொண்டு இருவரும் 
விளையாடுபவர்கள்.
கற்பனைக் கடலில் நடந்து 
செல்பவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

சகுனியின் சூழ்ச்சி அறியாதவர்கள்.
திருஷ்ராஷ்டிரனின் பேராசை 
இல்லாதவர்கள்.
தருமனைப் போல் வாழ்வில் 
சூதாட்டம் ஆடாதவர்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

காலங்களில் வசந்தம்.
மாதங்களில் மார்கழி.
பழங்களில் முக்கனி.
நதிகளில் கங்கை.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

தங்களை வெட்ட வரும் 
வேட்டுவனுக்கும் நிழல்தரும் 
மரம் போன்றவர்கள்.
தங்களை கசக்கும் விரல்களுக்கும் 
மணம் தரும் பூவைப் 
போன்றவர்கள்.
உலகம் அவர்களை வெறுத்தாலும் 
உலகை வேறுக்காதவர்கள் .
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

மனித ஒழுக்கத்தின் 
முழு உருவங்கள்.
இயற்கைக்கு அழகு ஊட்டும் 
அணிகலன்கள்.
மனித உருவ பவளங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

அவர்களின் காதல் பாலினும் 
வெண்மையானது.
காதலை தெய்வமாக மதிப்பவர்கள்.
இவ்வுலகின் இன்றியமையா 
பொக்கிஷங்கள்.
அவர்கள் இரு காதல் சிட்டுக்கள்.

Tuesday, 17 March 2015

Kavithai - 84

பின்னணி 



ஒருவனை சிரிக்க வைப்பது 
கோமாளியின் வித்தைகள்;
அவனை சிந்திக்க வைப்பது 
எழுத்தாளனின் கருத்துக்கள்.

ஒருவனை மேதையாக்குவது 
ஆசான்களின் பாடங்கள்;
அவனை பேதையாக்குவது 
மூட நம்பிக்கையின் சட்டங்கள்.

ஒருவனை வீரனாக்குவது 
சரித்திரத்தின் போதனைகள்;
அவனை கோழையாக்குவது
அடிமைத்தனத்தின் சோதனைகள்.

ஒருவனை மனிதனாக்குவது 
ஆறாம் அறிவு;
அவனை மிருகமாக்குவது 
பணத்தின் மீதான பரிவு.

ஒருவனை ரசிக்க வைப்பது 
கலையும் அழகும்;
அவனை வெறுக்க வைப்பது 
வறுமையும் தீமையும்.

ஒருவனை காதலிக்க வைப்பது 
பெண்ணின் அழகு;
அவனை பித்தனாக்குவது 
அதே பெண்ணின் பிரிவு.

Sunday, 15 March 2015

Kavithai - 79

அமரக் காதல் 



ஆசை என்னும் எண்ணத்தாலே,
இதயம் என்னும் புத்தகத்திலே,
காதல் என்னும் எழுதுகோலாலே,
காவியம் எழுதுகிறோம் நாம்.
நாமோ, இணைந்தால் வாழ்வோம்;
பிரிந்தால் மறிப்போம்.
ஆனால், நம் காதல் காவியமோ,
என்றேண்டும் நிலைத்திருக்கும் 
காதல் கொண்ட இளம் இதயங்களிலே!



எங்கள் காதல் 


எங்கள் காதலை எதிர்த்தே 
சோர்ந்து விடும் உலகம்; ஆனால்,
ஒரு நாளும் அயராது.
எங்கள் இளமை மாறா காதல்.

போராடியே உலகுடன் நிதமும்,
மரித்தாலும் ஒரு தினம்,
மறையாது ஒரு நாளும்,
அமுதுண்ட எங்கள் அமரக் காதல் !

Kavithai - 78

காதல் நாடகம் 


நான் ஒரு நாள் சென்றிருந்தேன் 
பேட்டி எடுக்க,
நடிப்பில் பல வெற்றிகளும்,
காதலில் பல தோல்விகளும்,
கண்ட நடிகர் சூப்பர் ஸ்டாரை.
அவரிடம் நான் கேட்டேன்,
"ஏன் காதலில் பல தோல்விகள்?"
அவர் கொடுத்த பதிலோ,
"இன்று சமுதாயம்  கண்டுள்ளது
பல முன்னேற்றங்களை.
நாகரீகம் செய்துள்ளது 
பல மாற்றங்களை.
நாடகத்தில் செய்யும் தவறை,
மாற்ற முடிவதில்லை மேடையில்.
இன்று சினிமாவில் நடிப்பதில்லோ,
மாற்றலாம் எண்ணற்றமுறை 
தவறிய காட்சிகளை.
காதலியை மாற்றுவதும்,
சினிமா நடிப்பின் தாக்கமே" !!!!

Friday, 13 March 2015

Kavithai - 83

மனிதன் 




அமைதியின் உருவமாக 
வந்த மனிதன்,
அமைதியே இல்லாத உலகை 
விட்டு செல்கிறான்.
பாவமே அறியாமல் 
வந்த மனிதன்,
பாவங்கள் பல 
செய்தபின் செல்கிறான்.
பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி 
கொண்டு வந்த மனிதன்,
குடும்பத்தை துன்பத்தில் 
ஆழ்த்திவிட்டு செல்கிறான்.
சுதந்திர ஜீவியாக 
வந்த மனிதன்,
கோடி அமரர்களிடம் 
சரணடைய செல்கிறான்.
உலகத்தின் அணிகலனாக 
வந்த மனிதன்,
ஆறடி நிலத்தை அழுக்காக்கி 
விட்டு செல்கிறான்.

Wednesday, 11 March 2015

Kavithai - 80

பெண்



கவலையை போக்க 
கொடுத்தான் மனஉறுதியை.
நினைத்ததை முடிக்க 
கொடுத்தான் திறமையை.
சிந்தனையை தூய்மையாக்க 
கொடுத்தான் தியானத்தை.
இவை அனைத்தையும் இழக்க 
படைத்தான் பெண்ணை !!!

Saturday, 7 March 2015

Kavithai - 77

இருள் 



நிலாவே !
நீ சூரியனிடமிருந்து
ஒளியைப் பெற்று
எங்களுக்கு தந்தாலும்
பயன் என்ன?
எங்கள் வாழ்க்கை
இன்னும் மூழ்கியுள்ளது,
இருளில் தானே !!



காண்கிறேன் 



அவள் பாசத்தில் நான்
என் அன்பைக் காண்கிறேன்;
வளையல்களின் சத்தத்தில்
என் மகிழ்ச்சியைக் காண்கிறேன்.
அவள் பெருமையிலே
என் நேர்மையைக் காண்கிறேன்.
அவள் தாலியிலே
என் கடமையைக் காண்கிறேன்.
அவள் சிரிப்பிலே
என் வெற்றியைக் காண்கிறேன்.
அவளது பொறுமையிலே
என் வாழ்க்கையைக் காண்கிறேன்.



செயல்கள் 


பூமியை தங்கமாக்க
பிடித்தேன் கலப்பை.
இதயத்தை இலேசாக்க
செய்தேன் தியானம்.
சிந்தனையை தூய்மையாக்க
செய்தேன் பிரார்தனை.
வாழ்க்கையை முழுமையாக்க
கைபிடித்தேன் உன்னை  !!!


Kavithai - 76

தாய்நாடு 



தமிழகம் இந்தியாவின் பழம்பெரும் அங்கம்,
அதுவே நம் உள்ளம் குடியிருக்கும் சொர்க்கம்.
அழகில் அது ஒரு எழில் விருந்தாவனம்,
சரித்திரத்தில் அது ஓர் வீ ரக் காவியம்.

வீரம் படைத்த சோழன் வாழ்ந்த நாடு,
நெஞ்சில் ஈரம் கொண்ட சேரன் ஆண்ட நாடு.
சங்கம் அமைத்து தமிழை வளர்த்த,
பாண்டியன் வாழ்ந்த நாடும் நம் நாடே.

அமிழ்தினும் இனிய நம்மொழிக்கு அமுதூட்டி,
புகழைப் படித்து வாழ்ந்தாள் ஔவை மூதாட்டி.
உலக பொதுமறையாம் திருக்குறளை படைத்தே 
அமரன் ஆன வள்ளுவர் வாழ்ந்ததும் நம் நாடே.

மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் 
கொழுத்திய பாரதி கண்ட நாடும் நம் நாடே.
அநீதியான தீர்ப்பு கூறிய நாட்டை,
அழித்த கண்ணகி வாழ்ந்ததும் நம் நாடே.

மயிலுக்கு போர்த்தி மகிழ்ச்சி கொண்ட பேகன், 
கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல்கள் வாழ்ந்த நாடு.
இந்திய தாயின் தலையில், தமிழகம் ஓர் மகுடமே,
போற்றி வாழ்ந்திடனும் நாம், நம் நாட்டை என்றுமே.

Kavithai - 75

இயற்கை 



காலை ஆனவுடன் கூவ,
சேவலுக்கு கற்றுகொடுத்தது யார்?
மாலை ஆனவுடன் ஒளிவீச 
நிலாவுக்கு கற்று கொடுத்தது யார்?
அன்றீனிய பசுவை 'அம்மா' என்றழைக்க 
கன்றுக்கு கற்று கொடுத்தது யார்?
உன்னை கண்டவுடன் காதல் கொள்ள,
என் இதயத்திற்கு கற்று தந்தது யார்?




புராணம் 


'அரசின் சேனையைவிட
உன் அழகு ஆபத்தானது'
என்றான் மாவீரன் சீசர்
கிளியோபாட்ராவைப் பார்த்து.
முற்றும் துறந்த
விசுவாமித்ரரே மயங்கினார்,
மேனகாவின் விசிகரிக்கும்
ஆட்டத்தைப் பார்த்து.
உலகில் மனித அவதாரம்
எடுத்த இராமனரே
மயங்கினார் சீதையின்
இனிய குரலைக் கேட்டு.
மாபெரும் காவியம் ஒன்றை
படைத்திருப்பானே  காளிதாசன்
கயல் போல் அழகிய
உன் கண்களைப் பார்த்து !!


Friday, 6 March 2015

Kavithai - 74

சோலை



காலை முதல் மாலை வரை 
களைப்பின்றி 
காளை போல் ஓடோடி 
உழைக்கும் எனக்கு,
இடையிடையே 
மனதில் வரும் 
உன் நினைவுகள்,
பாலைவனத்தில் சோலையை 
காண்பது போல் உள்ளது !!




அழியாச் சுவடுகள் 


காலம் எமனின் வாகனம்,
மனிதர்கள் அதில் பயணிகள்.
காலம் அழித்துவிடுகிறது 
நாம் கடந்த காலத்தையும்,
நாம் பட்ட கஷ்டங்களையும்.
ஆனால், அழிக்க முடிவதில்லை 
நம் கடந்த காலத்து நினைவுகளையும் 
நாம் விட்டு வந்த வழித்தடங்களையும் !!




மண் 


மண்ணாலே உருவான மனிதன்,
மண்ணுலகிலே வருகிறான் வாழ.
விண்ணழவு பணம் படைத்தாலும்,
மாண்டபின் செல்வதோ மண்ணுக்குள்ளே!!




பூஞ்சோலை 


உன் கூந்தலில் வைத்த 
பூக்கள் ஆனது பூமாலை.
உன் கழுத்தில் கட்டிய 
மாலை ஆனது மணமாலை.
உன் அழகை வர்ணித்த 
வரிகள் ஆனது பாமாலை.
இம்மாலைகள் கொண்ட நீ 
ஒரு அழகிய பூஞ்சோலை !!




சமம் 


காதலே செய்யாத வாலிபன் இதயம் 
நீரே இல்லாத கிணற்றிற்கு சமம்.
ஒரு பெண்ணை காதலிப்பவனின் இதயம் 
நீர் நிறைந்து ஓடும் நதிக்கு சமம்.
பல பெண்களை காதலிப்பவன் இதயம் 
வெள்ளம் உடைத்த குளத்திற்கு சமம்.




Kavithai - 73

கணக்கில்லை!




நாங்கள் மனம் விட்டு 
பேசிய வார்த்தைகள் எத்தனை!
நாங்கள் இயற்றி மெட்டு,
பாடிய பாடல்கள் எத்தனை!
நாங்கள் வானம் தொட்டு,
பறந்த நாட்கள் எத்தனை!
நாங்கள் வாழ ஒன்றுப்பட்டு
கண்ட கனவுகள் எத்தனை!
எங்கள் நட்பில் விழ வெட்டு,
முயன்ற நபர்கள் எத்தனை!
நாங்கள் சூழ்ச்சிக்கு கட்டுப்பட 
பின்னிய வலைகள் எத்தனை!
எங்களை பிரிக்க வேலி இட்டு,
முயன்ற உறவினர்கள் எத்தனை!
எங்களை பிரிவால் வாட்டும் 
துன்பங்கள் தான் எத்தனை!!!


Kavithai - 72

பொறுமை 




மேகம் கண்டு, மழையைக் கண்டு 
நிதமும் ஆட ஆனந்தத்தால்
மயிலுக்கு கொடுத்து வைக்கவில்லை.
உன்னைக்கண்டு, உன் குரலைக் கேட்டு,
நிதமும் வாழ மகிழ்ச்சியோடு,
எனக்கு கொடுத்து வைக்கவில்லை !

முகில் கருக்கும், மழை பொழியும்
என்று பொறுமையுடன் மயில் 
அமைதிக் கொள்கிறதே - அது எப்படி?
காலம் கனியும், நாமும் சந்திப்போம் 
என்று நினைத்தே நாட்களை போக்க,
முடிவதில்லையே ஏன் ? சொல் என் அன்பே !!




மனக்கண் பார்வை 


நான் வாழும் உலகம் 
நிறைந்துள்ளது மனிதர்களால்.
என் பாரத நாடு 
நிறைந்துள்ளது சகோதரர்களால்.
நான் பிறந்த ஊர் 
நிறைந்துள்ளது அன்பர்களால்.
நான் வசிக்கும் வீடு 
நிறைந்துள்ளது உறவினர்களால்.
என்றும் என் இதயம் 
நிறைந்துள்ளது நண்பர்களால் !!!

Kavithai - 71

வறுமை 




தன் பெற்றோரையும், தன் சுகத்தையும்,
வாழ்ந்த தன் அரண்மனையையும் மறந்து,
ஊர்வாய் உளறலை துச்சமாக நினைத்து,
தன் இதயத்தை எனக்கு பரிசாக கொடுக்க,
முன்வந்த இனிய அரண்மனைப் புறாவே!
நீ என்னை மறந்து விடு.!
செழிப்பில் தவழ்ந்த அரண்மனைப் புறாவுக்கு,
எனது புறாக்கூண்டில் இடம் குறை படும்.
உனது தூய வெள்ளை இதயத்தை அணைக்க,
எனது கந்தல் ஆடைகள் தடையாக உள்ளது.
வாவென்று விரும்பி அழைத்தாலும் மனதுக்குள்,
வாய் எனது கூச்சப்படுகிறது உன்னை அழைக்க.
பசுமையை உன் வாழ்விலிருந்து பிரித்து,
சுமையை கொடுக்க மறுக்கிறது என் இதயம்.
காதலுக்கு தூது விட்ட என் இனிய புறாவே !
நீ என்னை மறந்து விடு !

Kavithai - 70

காதல் காதல் 



காப்பாற்றுவோம் கடமைகளை சீரோடு, என்ற 
ன்னம்பிக்கையுடன் உள் மனதோடு,
ல்-லறத்தில் இணையும் தம்பதிகளே, அழியா 
காதல் கொண்ட இனிய அன்பர்கள்.




அகராதி 


ழகான உன்னை கண்டதும்,
சை பிறந்தது இதயத்தில்.
ன்பம் பெற்றேன் அளவற்று 
டு இல்லை இவ்வுலகில்.
ன்னுடன் நிதமும் பேச,
மை இதயமும் துடிக்கிறது.
ன்னிதயம் உனக்காக துடிப்பது,
ன் என்று புரியவில்லை எனக்கு;
யப்படுகிறேன் இது காதலென்று.
ன்று நிச்சையிக்கிறேன் இன்று,
யாது ஒருநாளும் நம் நட்பு.
வை போல் பாடுவேன் நிதமும்,
தை உலகு மறவாது எக்காலமும்.




காதல் திருமணம் 


ண்மணி உன்னுடன் உண்மையோடு 
காதல் கொள்கிறேன் இதையதால்.
கிளிகளைப் போல் கொஞ்சுவோம்,
கீதங்கள் பல பாடுவோம் இணைந்து.
குருவிகள்  இரண்டு சேர்ந்து,
கூடுகட்டி வாழ்வது போல் நாம்,
கெட்ட உலகை விட்டு விலகி,
கேடரியாத புதிய உலகை உருவாக்கி,
கைகோர்ந்து வாழ இன்று முதல்,
கொண்டு வந்துள்ளேன் கல்யாண மாலை.
கோவிலில் மணந்து, இன்று நாம்,
கௌரவிப்போம் நமது காதலை !!

Kavithai - 66

ஏற்றம் இறக்கம் 



வாழ்வில் ஏற்றம் உண்டானால் 
உண்டு அதில் இறக்கமும்.
இறக்கத்தால் கூடுகிறதே 
அவ்வாழ்வின் பொலிவு.

பறக்கும் பறவை இறங்காவிட்டால் 
ஏது அதற்க்கு இரை?
இறைவன் கொடுத்த நல்வாழ்வில்,
இறக்கம் இல்லை ஒரு குறை.




வெற்றி 



வாழ்க்கையில் வருகிறது
சோதனை மேல் சோதனை
என்று மனமுடைந்து 
அடையாதீர்கள் வேதனை.

சோதனைகள் தருகின்றன 
வாழக்கையில் போதனைகள்,
என்று அறிந்துக்கொண்டால் 
படைக்கலாம் பல சாதனைகள் !




அனுபவம் 


துன்பம் அனுபவித்ததை மறந்தால்தான் 
சீராய் செயல்புரியலாம் நிகழ்காலத்தில்.
இன்பம் அனுபவிக்காததை நினைத்தால்தான் 
உழைத்து உயரலாம் வாழும் காலத்தில்.








Kavithai - 69

இறுதி வரை



என் கண்கள் உன்னையே காணும் 
என் கண்கள் மூடிவிடும் வரை.
என் இதயத்தில் நீயே இருப்பாய்,
என் இதயத்துடிப்பு நின்றுவிடும் வரை.




தூது 



பார்வை என்னும் அம்பு அனுப்பி,
இதயம் என்னும் தளத்தை கைப்பற்றினாள்.
சம்மதம் என்று தூது அனுப்பி,
காதல் என்னும் சமரசம் செய்துக்கொண்டோம்.




கடல் 


உலகம் என்னும் கடலினிலே,
நீந்திவரும் காதல் மீன்கள் நாம். அதில்,
காதல் என்னும் நீர் வற்றினால்,
காதலர்களாகிய நாம் சாவோம் துடித்து.



பிரசவம் 



ஐயிரண்டு மாதங்கள் வயிற்றில் 
சுமந்த குழந்தையை 
ஆசையோடு உலகுக்கு 
அறிமுகம் செய்துவிட்டு,
குடும்பம் புகழ்பெற கண்ட 
கனவுகள் நிறைவேற 
ஆவல்மிகுந்த எதிர்பார்ப்புகள் 
ஆரம்பமாகும் நேரம் !!



உவமை 



தெய்வம் இல்லாத ஆலயம்,
ஆன்மா இல்லாத உடலே.
காதல் இல்லாத இதயம்,
மெட்டு இல்லாத பாடலே.




காதலித்ததும்....



சிரித்தாலும் மகிழாத
மனது மகிழ்ந்தது.
சிந்தித்தாலும் செயல்படாத
வாழ்க்கை செயல்பட்டது.
கனவிலும் காணாத 
கற்பனை தவழ்ந்தது.
சீறினாலும் பகைக்காத 
உலகம் பகைத்தது.




துரோகம் 


சூரிய ஒளி பெற்று 
மலர்ந்த மலரைப்போல்,
அவள் வரவைக்கண்டு 
மலர்ந்த  என் இதயம்,
இரண்டாக பிழந்ததே 
அதிர்ச்சி கண்ட பூமிபோல்,
அவளது துரோகம் கண்டு !!!





Kavithai - 68

பெற்றவை 



கல்வியும் செல்வமும் பெற்றேன் 
அறிவைக் கொண்டு.
பகையையும் தீமையையும் வென்றேன் 
அஞ்சா நெஞ்சம் கொண்டு.

பாசத்தையும் நட்பையும் பெற்றேன் 
என் அன்பை கொடுத்து.
கற்பனையும் கவிதையும் 
பெற்றேன் அவளிடம் இதயம் கொடுத்து !




ஈருடல் ஓருயிர் 



நான்கு கண்கள் வேண்டும் 
என்றேன் இறைவனிடம்.
இரண்டில் நீ மட்டுமே 
காட்சி அளிப்பதால் !

இரண்டு இதயம் வேண்டும் 
என்றேன் இறைவனிடம்.
ஒன்றை உன்னிடம் 
கொடுத்து விட்டதால் !

வானத்தில் எதற்கு நிலா 
என்றேன் இறைவனிடம்.
நிலாவே உன் வடிவில் 
பூமியில் வந்துள்ளதால் !

இருவருக்கும் போதும் 
ஓருயிர் என்றேன் இறைவனிடம்.
நாமிருவரும் ஒன்றாய் 
இணைந்து வாழ்வதால் !




Kavithai - 67

ஏன் ?


அவளது கண்களால் 
நான் மயங்கினேன்.
அவள் என்னை 
பார்க்காதது ஏனோ?

அவளைப் பார்த்து 
நான் புன்னகைத்தேன்.
அவள் என்னை 
கோமாளி என்றது ஏனோ?

அவளுக்கு நான் ரோஜா மலர் 
ஒன்றைக் கொடுத்தேன்.
அதை அவள் 
வாங்காதது ஏனோ?

அவளுக்கு கடிதம் 
ஒன்று எழுதினேன்.
அவள் கடிடத்திற்கு 
பதில் எழுதாதது ஏனோ?

அவளிடம் காதல் சொல்ல 
நான் பாடினேன்.
அவள் என்னை 
தேவதாஸ் என்றது ஏனோ?

அவளின் நினைவால் 
என் மனநிலை சற்று இழந்தேன்.
அவள் என்னை 
பித்தன் என்றது ஏனோ?

அவளின் ஏவலினால் நான் 
சிறைவாசி ஆனேன் 
அவள் என்னை இவ்வளவு 
வெறுப்பது ஏனோ?

அவளிடம் நான் என் 
செல்வத்தைக் காட்டினேன்.
"என்னுயிர்த் தோழா",
என்றழைத்தது ஏனோ? ஏனோ?

Tuesday, 3 March 2015

கவிதை - 65

இளைஞர்  பணி 




அறுபத்தேழு ஆண்டுகள் ஆகிற்று
விடுதலை பெற்று நம் நாடு.
ஆனால், இன்னும் மாறவில்லை
ஏழைகள் படும் பாடு.
இங்கு அரசியலே
ஊழல் குடியிருக்கும் வீடு,
இந்நிலையை நம் இளைஞர்
மாற்ற வேண்டும் அடியோடு.




நரகவாசிகள் 



இந்திய வீதி ஒன்றில் 
நடந்து சென்றேன் ஒரு நாள்.
கண்டவை கண்களால் :
இருபுறமும் குடிசைகள்,
பசியால் வாடும் 
பல சிறு குழந்தைகளும்,
இரு கரங்களையும் 
ஏந்தியபடி இரவலர்களும்.

இறைவனிடம் கேட்டேன்,
"ஏன் இந்த குறைபாடு?"
பதிலளித்தார் அவர்,
"இதுவே மீறிய ஜனத்தொகை 
படுத்தும் பாடு!"

நடந்தேன் தொடர்ந்து 
உடைந்த மனதோடு.
கண்டேன் பெரும் செல்வர் 
வாழும் அரண்மனைகள்.
கேட்டேன் இறைவனிடம்,
"ஏன் இந்த வேறுபாடு?"
சொன்னார் அவர்,
"இதுவே இந்நாட்டில் 
 ஊழல் செய்யும் பாகுபாடு!"

ஓவென்று அழுதேன் வேதனையால்.
"எழுபது ஆண்டுகளுக்கு முன் 
இவர்கள் இங்கு அடிமைகள்.
இன்று இவர்கள் 
சுதந்திர நாட்டின் நரகவாசிகள் !!





Kavithai - 64

ஞானி 



மனிதனின் மனம் 
உடையும்போது இரண்டாக,
குறைவதில்லை 
அவனரிவு பாதியாக.
புரிந்துக்கொள்கிறான் 
அவன் உலகை இரட்டிப்பாக,
அதன்பின் வாழ்கிறான்,
அவன் ஞானியாக !!




நிறைவேறா ஆசைகள் 



கரையைக் காண 
ஓடிவந்ததாம் கடல் அலை.
வானத்தை தொட 
ஆசைப்பட்டதாம் ஒரு மலை.
உயிருடன் உலவ 
துடித்ததாம் சிற்பியின் சிலை.
செல்வரின் மகளை 
காதலிக்க முயன்றான் ஒரு ஏழை.

கரை சேர்ந்ததும் 
மாண்டுப் போனது கடல் அலை.
மலை வளர வளர 
விலகிக்கொண்டது விண் எல்லை.
உலகமே மாறினாலும் 
நடக்குமோ கற்சிலை?
வலையில் மீன் போல் துடித்தபோது,
அறிந்தான் ஏழை தன் பிழை !!



கானல் நீர் 


எட்டிவிடும் தூரத்தில் 
வசந்தம் இருப்பதாக நினைத்து,
உன் மனதை 
தொட்டுவிட முயன்றேன்.
என்னை விட்டு நீ 
விலகியதும் புரிந்தது -
நான் நினைத்தது 
வசந்தமில்லை - வெறும் கானல் நீர் !!

Kavithai - 63

ஒழுக்கம் 



மனித உடலில் 
உயிரை வைத்தபின்,
இறைவன் ஆறாம் அறிவை
வைத்தார் அவ்வுடம்பில்.

மிருகங்களில் அவ்வறிவை 

வைக்க மறந்த இறைவன்,
நல்லொழுக்கம் என்னும் 
வரத்தைக் கொடுத்தார் !!





ஏன்? 


இறைவன், ஏழைகளிடம் 
செல்வம் கொடுக்காதது ஏன்?
பேராசையின் வலையில் 
சிக்கிவிடக்கூடாது என்பதற்கோ?

செல்வரிடம் ஈகைத்தன்மை  

கொடுக்காதது ஏன்?
தருமத்தை நம்பியே ஏழை
வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்கோ?




சாபம் 



ஆதியிலே மனிதனை 
உருவாக்கிய இறைவன்,
அவன் காலடியில் 
வைத்தான் முழு உலகை.

பாதியிலே இறைவனை 
மறந்த மனிதன்,
வியாதியோடு கழிக்கிறான்
தன் முழு வாழ்வை !!



அழகு 



இரை தேடி பறவை 
பறப்பது எழில்மிக்க காட்சி.
கடல் நோக்கி நதி செல்வது
எழில்மிக்க காட்சி -
அழகு இயற்கைக்கு சாட்சி.

பசிபோக்க உழவர் 
உழைப்பதும் எழில்மிக்க காட்சி.
உழைப்பால் உயர்வது 
இயற்கையின் அழகு  -
அதற்க்கு இவர்கள் சாட்சியே !!





Kavithai - 62

கவலை வேண்டாம்



உன்னை மணந்து,
இணைபிரியாமல் வாழ்ந்து
வாழ்க்கையை கழிக்கலாம்
என்று நான் எண்ணியவை
நிறைவேறாவிட்டாலும்,
எனக்கு வருத்தம் சிறிதும் இல்லை.

இன்று முதல்
ஆரம்பமாகிறது புது வாழ்வு.
இணைபிரியா துணைவியான
கவலையை மணந்து,
சோகக் கவிதைகளை,
பெறப்   போகிறேன் !!

Kavithai - 61

மழை 



"மழையே ! மழையே ! வா வா"
என்று வருந்தி அழைத்தால்
நில்லாமல் வந்துவிடுமோ மழை?
"மழையே வந்துவிடு ! 
எங்கள் உயிரை காப்பாற்றிவிடு!"
என்று கெஞ்சி கதறினாலும் 
மழை பொழிந்து விடுமோ?
இயற்கையை மதித்து,
மரங்களை வாழ விட்டு,
அவைகளை பொறுப்போடு 
வளர்த்து வந்தால்,
பொழியாதோ மழை தானாக??

Sunday, 1 March 2015

Kavithai - 60

பாதை 




காதலர் நடக்கும் பாதையை 
உலகம் அமைத்துள்ளது முட்களிட்டு.
முட்பாதையே ஆனாலும்,
காதலர்கள் பன்றுதொட்டு,
நடந்து வந்துள்ளனர் 
காதல் நெறிக்கு கட்டுப்பட்டு.
அப்பாதையில் நாங்கள் 
வைத்துள்ளோம் முதல் எட்டு !

"நாங்கள் இருவரும் 
இதயத்தால் ஒன்றுப்  பட்டு,
வாழ்வோம் பிரியாமல் 
ஒருவர் மற்றவரை விட்டு.
உயிர் பிரிந்தாலும்,
பிரியாது காதல் உடலை விட்டு"
என சபதமெடுத்து வைக்கிறோம் 
காதல் பாதையில் முதல் எட்டு !!


Kavithai - 59

வெற்றி வாழ்க்கை 




நடக்க தெரியாமல் 
வந்த மனிதன்,
பிறர் நடக்க தடம்
அமைத்துக்கொண்டு செல்கிறான்.

சிரிக்க தெரியாமல் 
வந்த மனிதன்,
பலர் இன்பமாய் வாழ 
வழி அமைத்துக்கொண்டு செல்கிறான்.

கல்வி இல்லாமல் 
வந்த மனிதன்,
பலர் ஞானிகளாய் வாழ 
கற்பித்துவிட்டு செல்கிறான்.

உலகம்  அறியாமல் 
வந்த மனிதன்,
புதிய உலகை மண்ணில் 
உருவாக்கிவிட்டு செல்கிறான்.

அன்பு செலுத்த தெரியாமல் 
வந்த மனிதன்.
பலர் இதயங்களை வென்றபின் 
உலகை விட்டு செல்கிறான்.


Kavithai - 58

உலகம் 




உன்னைக் கண்டதும்,
கண்கள் மயங்கியது.
கண்கள் மயங்கியதும்,
காதல் அரும்பியது.
காதல் அரும்பியதும்,
இதயம் நிரம்பியது.
இதயம் நிரம்பியதும்,
கற்பனை வளர்ந்தது.
கற்பனை வளர்ந்ததும்,
கவிதை எழுதினேன்.
கவிதை எழுதியதும்,
காதலை உலகம் அறிந்தது.
உலகம் அறிந்ததும்,
நம்மை ஏற்றுக்கொண்டது.
உலகம் ஏற்றுக்கொண்டதும்,
நாம் மணந்துக் கொண்டோம் !!!

Kavithai - 57

ஏன் ?



பல மதங்களை படைத்த நாம்,
இறைவன் ஒன்றென்பதை மறந்தது ஏன்?
பல மொழிகளை பேசும் நாம்,
சிந்தனை நமது ஒன்றென்பதை மறந்தது ஏன்?

பல பெண் மேதைகளை கண்ட நாம்,
சம உரிமை கொடுக்க மறந்தது ஏன்?
பல கொடிகளை பிடிக்கும் நாம்,
நமது கொள்கையை மறந்தது ஏன்?

பல கனவுகள் காணும் நாம்,
அவைகளை நனவாக்க மறந்தது ஏன்?
எண்ணிக்கையில் வளர்ந்த நாம்,
எண்ணத்தால் உயர மறந்தது ஏன்?

பல காவியங்கள் படைத்த நாம்,
பெருமை கொள்ள மறந்தது ஏன்?
பல மாநிலங்களில் வாழும் நாம்,
இந்தியர் என்பதை மறந்தது ஏன்?

Kavithai - 56

வெற்றி வாழ்க்கை 



சுவை இல்லாத வாழ்வை 
இனிமை ஆக்கியவள்.
கற்பனை இல்லாத வாழ்வை 
கவிதை ஆக்கியவள்.

தோல்வியுற்ற வாழ்வை 
வெற்றி பெற செய்தவள்.
சோதனை மிகுந்த வாழ்வை 
போராட வைத்தவள்.

வாசமில்லா வாழ்வை 
பூந்தோட்டமாக மாற்றியவள்.
வீணாகிக்கொண்டிருந்த வாழ்வை 
உபயோகிக்க கற்று தந்தவள்.

இருள் வானமாய் இருந்த வாழ்வில் 
நிலா ஒழியாய் வந்தவள்.
தனிமையால் வாடிய வாழ்வில் 
துணைவியாக வந்தவள் !!!